சென்னை:திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டினம் - ஆலங்கியம் கிராமங்களுக்கு இடையில், அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட கோரும் மனுவை பரிசீலிக்கும்படி, கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாராபுரம் தாலுகா, தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த ரபிதீன் என்பவர் தாக்கல் செய்த மனு:எங்கள் கிராமத்தில் வசிப்பவர்கள், விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி உள்ளனர். அமராவதி ஆற்றுப்படுகையில் உள்ள இந்த கிராமம், ஆலங்கியம் போலீஸ் எல்லைக்குள் வருகிறது.
அமராவதி ஆற்றின் மற்றொரு புறம், ஆலங்கியம் கிராமம் உள்ளது. 10 கி.மீ., துாரத்தில் உள்ள ஆலங்கியத்துக்கு செல்ல, ஒரு மணி நேரம் ஆகிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தால், 15 நிமிடங்களில் சென்று விடலாம்.பாலம் கட்டக் கோரி மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அமராவதி ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, 'மாவட்ட கலெக்டரிடம், மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிவுடன் பரிசீலித்து, சட்டப்படி உரிய நடவடிக்கையை கலெக்டர் எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE