மதுரை; ''மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கான ஆய்வு பணி விரைவில் துவங்கப்படும்,'' என, மதுரை மேலாண்மை கழகம் சார்பில் நடந்த தேசிய மேலாண்மை தின விழாவில் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் கூடுதல் பொது மேலாளர் பார்த்திபன் பேசினார்.விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கவுரவ செயலாளர் அழகு பாண்டியன் முன்னிலை வகித்தார்.கூடுதல் பொதுமேலாளர் பார்த்திபன் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் தலா 50 சதவீதம் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னையில் முதற்கட்டமாக 44 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் பாதை அமைத்து சேவை வழங்குகிறோம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன், சென்னை விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளன. இப்பணி 2015-19 வரை நடந்தது. தற்போது ரூ.63 ஆயிரம் கோடியில் 2ம் கட்ட பணி துவங்கியுள்ளது. இதன் மூலம் 118.9 கிலோ மீட்டருக்கு மெட்ரோபாதை அமைகிறது. இதில் 42.6 கிலோ மீட்டருக்கு சுரங்கம் வருகிறது.மதுரையில் மெட்ரோ: 20 லட்சம் மக்கள் தொகையுள்ள நகரில் மெட்ரோவை கொண்டுவர முடியும். தினமும் 20 ஆயிரம் பேர் வரை பயணிக்க வேண்டும். சென்னைக்கு அடுத்து கோவையில் மெட்ரோவிற்கான ஆய்வு முடிந்துள்ளது. மதுரையிலும் இச்சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான ஆய்வு பணி விரைவில் துவங்கும், என்றார்.அத்யாபன சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் அருணா விஸ்வேஸ்வர், செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, பேராசிரியை மனுவாசுகி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE