கூடலுார்:கூடலுார் அருகே, நடுவட்டம் பகுதியில் பனிப்பொழிவின் காரணமாக, தேயிலை கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியின் பொருளாதாரம் தேயிலை, உற்பத்தியை சார்ந்துள்ளது. தொடர்ந்து, இதன் விலை வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், கடந்த பல மாதங்களாக, ஓரளவு விலை கிடைத்து வருகிறது. விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.இந்நிலையில், பரவலாக தொடரும் பனிப்பொழிவின் காரணமாக, தேயிலை கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது.
கூடலுார், நடுவட்டம், அனுமாபுரம், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். விவசாயிகள் கூறுகையில்,'பல ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு பரவலாக பருவமழை பெய்ததால், பசுந்தேயிலை விளைச்சல் நன்றாக இருந்தது. ஓரளவு நல்ல விலைகிடைத்து வருகிறது.
இந்நிலையில், பனிப்பொழிவு காரணமாக பசுந்தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் குறைந்து, கோடைமழை பெய்தால் மட்டுமே எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE