சோமனுார்:பாலம் கட்டும் பணி தாமதமாவதால், சாமளாபுரம் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சோமனுார் அடுத்த சாமளாபுரத்தில் இருந்து அய்யன்கோவில் வழியாக பல்லடம், திருப்பூர் செல்லும் ரோடு உள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டில், பெரும்பள்ளம் எனும் இடத்தில் பாலம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற்காக அருகில் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டது. பாலப்பணி மிகவும் தொய்வாக நடப்பதால், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து சாமளாபுரம் பகுதி மக்கள் கூறியதாவது:பெரும் பள்ளத்தில் பாலம் கட்டத்துவங்கி பல மாதங்கள் ஆகிறது. அஸ்திவாரம் போடப்பட்டு, பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டது. மேல்புற கான்கிரீட்டுக்காக கம்பி கட்டியதோடு சரி. அதற்குப்பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை.மாற்றுப்பாதையும் மேடு பள்ளமாக மாறிவிட்டது. இதனால், அவ்வழியே, வாகனங்களில் யாரும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணி துவங்கியதில் இருந்து பஸ்கள் அந்த ரோட்டில் ஓடுவதில்லை. அதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி வந்து ஆய்வு செய்தபின்னரே, மீதமுள்ள பணிகள் துவங்கும் என, கூறுகின்றனர். எப்போது மீண்டும் துவங்கி முடிப்பார்கள் எனத்தெரியவில்லை. அதுவரை எங்கள் அவதி தீரப்போவதில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE