உடுமலை:தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், நெரிசலை தவிர்க்க, 'ரவுண்டானா' அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டு, உடுமலையில் நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள நகரத்தில், ரோட்டோரத்தில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.முக்கிய ரோடுகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு, 'பார்க்கிங்' வசதி இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது. இதனால், ஏற்படும் நெரிசல், நகரப்பகுதியில், தொடர்கதையாக உள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. உதாரணமாக, நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பட்டது. நகர எல்லையில் அமைந்துள்ள கொல்லம்பட்டரை பகுதியிலிருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் கட்டப்பட்டது.இத்திட்டத்துக்கு, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினரை ஒருங்கிணைத்து, பாரபட்சமில்லாமல், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்திட்ட செயல்பாட்டின் போது, நகரிலுள்ள ரோடு சந்திப்பு பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.குறிப்பாக, திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பிலும், பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், 'ரவுண்டானா' அமைப்பதற்கான திட்ட வரைவு அனைத்துத்துறை ஆலோசனைகள் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டது.நீண்ட இழுபறிக்குப்பிறகு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மட்டும், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை சந்திப்பில், 'ரவுண்டானா', அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அப்பகுதி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் சந்திப்பு பகுதியாக உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில், அதிக நெரிசல் அப்பகுதியில் நிலவுகிறது.நகர நுழைவாயிலாக அமைந்துள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினரை ஒருங்கிணைத்து, 'ரவுண்டானா' அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE