சேலம்: ‛நான் மந்திரவாதி அல்ல, செயல்வாதி' என்றும், ‛ஸ்டாலின் கூறுவது போல் நான் மந்திரவாதியாக இருந்திருந்தால் அவர் பேசியிருக்கவே மாட்டார்' எனவும் முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நின்று பேசுகிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவர் முதல்வராக இருந்தால் எவ்வளவு சந்தோசப்படுவீர்களோ அந்த சந்தோசம் எனக்கும் உள்ளது. தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும் முதல்வர் மாவட்டம் என்ற பெருமை சேலத்திற்கு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிருக்கு மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கிய திட்டம் காலத்தால் அழிக்க முடியாத திட்டம். 2 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தார் ஜெயலலிதா. துரதிஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டாலும் அவர் வழியில் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பொருளதார சிக்கலால் பெண்களின் திருமணம் தடைபடக்கூடாது என தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை வழங்கியவர் ஜெயலலிதா. கொரோனா பரவிய இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் விலையில்லா அரசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. ஏழைக்குழந்தைகளும் சுகாதாரமாக வாழவேண்டும் என்பதற்காக 16 பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம் வழங்கப்படுகிறது.

ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங்க அம்மா மினி கிளினிக் போல திமுக ஆட்சியில் ஏதேனும் திட்டம் நிறைவேற்றியுள்ளார்களா? தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக திட்டங்களை அறிவிக்கவில்லை. மக்களின் சூழ்நிலையை அறிந்து பொங்கல் பரிசு போன்ற திட்டங்களை அறிவித்தோம். இதை கூட ஸ்டாலின் தடுக்க முயற்சித்தார். 2019 பாராளுமன்ற தேர்தலின் போது ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. அரசிடம் கூட அந்த மனுக்களை ஸ்டாலின் கொடுக்கவில்லை. மனுக்களை வாங்குகிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறார். சாயம் வெளுத்து விட்டது; மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.
தனி தாலுகா
திமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறார். 1100 என்ற எண் மூலமாக மக்கள் பிரச்னையை தீர்க்கும் திட்டம் 2020 சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது.52 லட்சம் மாணவ, மாணவியருக்கு ரூ.12,000 மதிப்பிலான மடிகணிணி வழங்கப்பட்டுள்ளது. குடிசையில் பிறக்கும் குழந்தைகளும் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆத்தூர் தாலுக்காவிலிருந்து தலைவாசல் தனி தாலுக்கா பிரிக்கப்படும். சேலம் மாவட்டத்தின் 14வது தாலுக்காவாக தலைவாசல் மாறுகிறது.

ஜெயலலிதா ஆட்சியிலிருந்து தற்போது வரை 17 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிகாலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவியது. நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி. ஸ்டாலின் கூறுவது போல் நான் மந்திரவாதியாக இருந்திருந்தால் அவர் பேசியிருக்கவே மாட்டார். தப்பு செய்தவரை தட்டிக்கேட்டால் தான் தலைவன்; தட்டிக்கேட்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்தவர் ஸ்டாலின். அவர் தமிழகத்திற்கு தேவையா?
பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கட்சி அதிமுக. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று மக்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டுமக்களை பற்றி சிந்திக்காமல் வீட்டு மக்களைப்பற்றி சிந்திக்கும் ஸ்டாலினுக்கு நாட்டு நடப்புகள் தெரிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE