வால்பாறை:தேயிலை தோட்டதொழிலாளர்களுக்கு, முதல்வர் அறிவித்த சம்பள உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.தமிழகத்தில், வால்பாறை, நீலகிரி ஆகிய இடங்களில், அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டக்கழகம் (டான்டீ) உள்ளது. இங்கு, பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக, 335.26 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே போன்று, தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 336.58 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு,தற்போது வழங்கப்படும் சம்பளத்துடன், 12.50 ரூபாயும், தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு, 5 ரூபாயும் சேர்த்து வழங்கப்படும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன்,முதல்வர் பழனிச்சாமிஅறிவித்தார். ஆனால், இன்று வரை தொழிலாளர்களுக்கு முதல்வர் அறிவித்த சம்பளம் வழங்கவில்லை.
தேயிலை தொழிலாளர்கள் கூறுகையில், 'குறைவான சம்பளத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, கூலி உயர்வு வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியளித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை அறிவித்த கூலி உயர்வு கிடைக்கவில்லை.
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தர, தொழிற்சங்கங்களும் போதிய அக்கறை காட்டுவதில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன், முதல்வர் அறிவித்த சம்பளம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து எஸ்டேட் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து ஆலோசனை செய்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE