புதுச்சேரி : புதுச்சேரியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில், ஸ்கூட்டருடன் அடித்து செல்லப்பட்ட, பெண் உடல் மீட்கப்பட்டது. அவர் குடும்பத்திற்கு, கவர்னர், 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம், ஒரே நாளில், 21 செ.மீ., மழை கொட்டியது. இதில், வெள்ளவாரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த, சசிக்குமார் மனைவி அசினாபேகம், 38, வாய்க்கால் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை எடுக்கச் சென்றார்.அப்போது, காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். 500 மீட்டர் துாரத்தில் ஸ்கூட்டர் மட்டும் ஒதுங்கியது. அசினாபேகத்தை போலீசார், தீயணைப்பு துறையினர் தேடினர்.நேற்று மதியம், 1:00 மணிக்கு, கனகன் ஏரியில், அசினாபேகம் உடல், கரை ஒதுங்கியது.
தீயணைப்பு துறையினர், உடலை மீட்டு, கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பினர். புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 'வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த, அசினாபேகத்தின் குடும்பத்திற்கு, கருணைதொகையாக, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE