கோவை:கோவை கலெக்டர் அலுவலகம் முன், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு, மொபைல் போன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான இன்டர்வியூ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் தலைமையில் நேற்று நடந்தது. 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், வந்திருந்தனர். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகளுக்கே மொபைல் போன் வழங்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிருப்தி அடைந்த மாற்றுத்திறனாளிகள், இன்டர்வியூ நடத்தக் கூடாது; அனைவருக்கும் போன் தர வேண்டும் என்று கோரி, கலெக்டர் அலுவலகம் முன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம் குமார் கூறுகையில், ''அரசு திட்டப்படி, பயனாளிகளை தேர்வு செய்கிறோம். மாணவர்கள், சுய தொழில் செய்வோர், மகளிர் உள்ளிட்ட பிரிவுகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். மாவட்டத்தில், 110 பேருக்கு மொபைல் போன் வழங்க ஒதுக்கீடு உள்ளது,'' என்றார்.தேசிய பார்வையற்றோர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் கூறுகையில், ''மாவட்டத்தில், 6,000 பேர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அனைவருக்கும் போன் வழங்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE