தி.மு.க., வின் தேர்தல் பணிகளை, 'ஐபேக்' குழு, ஓராண்டுக்கும் மேலாக ஒருங்கிணைத்து வருகிறது. தனிக்காட்டு ராஜாவாக, தர்பார் நடத்தி வரும் மாவட்ட செயலர்களுக்கு, பிரசாந்த் கிஷோர் குழுவினரின், இந்த நடவடிக்கைகள் சற்றும் பிடிக்கவில்லை.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மருமகன், சபரீசனின் தலையீடும் அதிகமாக உள்ளதால், மாவட்ட செயலர்கள் உச்சக்கட்ட எரிச்சலில் உள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு உதயநிதி, வந்து சென்றார்; ஸ்டாலின் வர இருக்கிறார். இதற்காக, ஐபேக் குழுவினர், மாவட்டத்தில் தி.மு.க.,வின் நிலை எப்படி உள்ளது, யார் செயல்படுகின்றனர், யார் நடிக்கின்றனர், சரியில்லாத பகுதிகள் எவை, நிர்வாகிகள் யார் யார் என, பட்டியல் தயார் செய்தனர். இறுதியில், எட்டு ஒன்றிய செயலர்களின் செயல்பாடு சரியில்லை.
அவர்களை மாற்ற வேண்டும் என, திண்டுக்கல், 'மாஜி'யிடம் ஐபேக் குழுவினர் கூறியுள்ளனர். திடுக்கிட்ட, 'மாஜி', சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தார். அவருடைய தவிப்புக்கான காரணம், 'தேர்தல் நேரத்தில் எதையாவது செய்யப் போய், பிரச்னை நம் பக்கமே திரும்பி விட்டால், என்ன செய்வது' என்பதுதான்.பார்த்தார் மாஜி... ஒன்றிய செயலர்களை மாற்ற நினைத்து, திண்டுக்கல் வந்த ஐபேக் குழுவினரையே மாற்றிவிட்டார். இதனால், பதவி பறிப்பில் இருந்து தப்பிய, ஒன்றிய செயலர்கள் நிம்மதியாக உள்ளனர்.அது சரி... ஐபேக் குழுவையே, ஓட ஓட விரட்டிய மர்மம் என்னவென்று தானே கேட்கிறீர்கள்.
'சம்பந்தப்பட்ட ஒன்றிய செயலர்களிடம், பதவி பறிக்காமல் இருக்க பேரம் பேசியதாக, மேலிடத்திற்கு, கச்சிதமாக, 'போட்டு' கொடுத்துவிட்டார்' என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். 'மாஜி' ரொம்பவே விபரம் தான் போங்க!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE