கோவை : கோவை அருகே, குளத்தில், ஏழு, சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, பேரூர் பெரியகுளக்கரை ரோட்டில், நேற்று காலை நடை பயிற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளத்தில் மூன்று சுவாமி சிலைகள் கிடப்பதை பார்த்தனர். பேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒரு அடி ஆழத்தில், ஏழு சிலைகள் கிடப்பது தெரிந்தது. பேரூர் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மீன் பிடிப்போர் உதவியுடன், உலோகத்தாலான, 2 அடி உயர மகாலட்சுமி; 2.25 அடி, விஷ்ணு துர்கை; 1.75 அடி, கருமாரியம்மன் மற்றும் சிறிய அளவிலான சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் சிலைகளுடன், 3 அடி கருமாரியம்மன் கருங்கல் சிலையும் மீட்கப்பட்டது.
அனைத்து சிலைகளும் பேரூர் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டன. உலோக, சிலை வடிவமைப்பாளர் ஒருவரை வரவழைத்த, வருவாய்த் துறை அதிகாரிகள், சிலைகள் குறித்து கேட்டனர். அவர், 'உலோக சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை' என, தெரிவித்துள்ளார்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் நேரில் விசாரித்தார். கடத்தப்பட்ட சிலைகளை விற்பனை செய்ய முடியாததால், குளத்தில் போடப்பட்டதா என்ற கோணத்தில், விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE