கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், அமித் ஷாவுக்கு எதிரான அவதுாறு வழக்கு, பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு, மாற்றப்பட்டது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அவதுாறுஇங்கு, மம்தாவின் உறவினரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.கடந்த, 2018ல், கோல்கட்டாவில் நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, தன்னை மிகவும் தரக்குறைவாக விமர்சித்ததாக, அந்த மனுவில் அபிஷேக் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

சம்மன் : -
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அமித் ஷாவுக்கு, 'சம்மன்' அனுப்பியது. அதன் அடிப்படையில், அமித் ஷா சார்பில், நேற்று ஆஜரான அவரது வழக்கறிஞர் பிரஜேஷ் ஜா கூறுகையில், “மனுவில், அமித் ஷாவின் முகவரி தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கோல்கட்டாவில் உள்ள பா.ஜ., அலுவலகத்தின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றார். இதன்பின், அபிஷேக் பானர்ஜியின் வழக்கறிஞர் சஞ்சய் பாசு கூறுகையில்,“அமித் ஷாவின், டில்லி மற்றும் ஆமதாபாதில் உள்ள இரண்டு முகவரிகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன,” என்றார்.

அதிகார வரம்பு : -
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி, 'இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது. எனவே, இந்த வழக்கு, கோல்கட்டாவில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது' என, உத்தரவிட்டார்.