மும்பை: ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அயோத்தியில் ராமா் கோவில் கட்டுவதற்கான நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் கோவில் கட்ட நன்கொடை வசூலிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள். இதனால் ராமர் பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார். 2014-ம் ஆண்டு வரை கருத்து கூற சுதந்திரம் இருந்தது. அப்போது அரசை விமர்சிப்பவர்கள் தேசதுரோக வழக்கில் சிறையில் அடைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூற முடியாமல் பேச்சுரிமையை இழந்துள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE