இடத்தை காலி செய்யுங்க!
'தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கும் வயதானவர்களுக்கென்றே, நம் நாட்டில் ஒரு பதவி உருவாக்கப்பட்டுள்ளது; அது தான் கவர்னர் பதவி. கண்டிப்பாக, அடுத்த சில மாதங்களில், இவருக்கு அந்த பதவி கிடைக்கும்' என, மத்திய பிரதேச மாநில முன்னாள், பா.ஜ., தலைவர் பிரபாத் ஜாவை கிண்டலடிக்கின்றனர், அந்த மாநில அரசியல்வாதிகள். பிரபாத் ஜா, தற்போது, பா.ஜ.,வின் தேசிய துணை தலைவர்களில் ஒருவராக உள்ளார். இது, ஒரு 'டம்மி' பதவி என்பது, கட்சியில் உள்ள நிர்வாகிகளின் கருத்து. பிரபாத் ஜா, ம.பி., அரசியலில் செல்வாக்குடன் இருந்தபோது, தற்போதைய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடும் சவாலாகவும், போட்டியாளராகவும் விளங்கினார். தனக்கு எப்படியும், முதல்வர் பதவி கிடைக்கும் என, அவர் நினைத்தார். ஆனால், கட்சி மேலிடத்தின் தேர்வு, சிவ்ராஜ் சிங் சவுகானாகவே இருந்தது.கடந்த சில ஆண்டுகளாகவே, ம.பி., மாநில, பா.ஜ., வினரின் உள்ளடி வேலைகளால், அவரால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லை; இதனால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
தற்போது, கவர்னர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்களிடம், இதற்காக ஆதரவு கேட்டு, துாது விட்டு வருகிறார்.ம.பி.,யில் உள்ள, பா.ஜ.,வினரோ, 'பிரபாத் ஜாவுக்கு, கவர்னர் பதவி கொடுப்பதில் எங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. இடத்தை காலி செய்தால் போதும்' என்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE