திருப்போரூர் : செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், அறுபடை வீட்டிற்கு நிகரானதாக உள்ளது. இக்கோவிலின், இந்தாண்டுக்கான மாசி மக பிரம்மோற்சவம், இம்மாதம், 17ம் தேதி துவங்கியது.
தினமும், கிளி வாகனம், வெள்ளி அன்ன வாகனம், மயில் வாகனம், யானை வாகனம் என, பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசி மகத்தின் முக்கிய விழாவான, ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம், நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. காலை, 6:00 மணிக்கு, உற்சவர் கந்த சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அங்கு நடந்த சிறப்பு பூஜையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் உட்பட, முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'கந்தா, சண்முகா, முருகா...' என, பக்தி பரவசத்தில் கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.காலை, 11:15 மணிக்கு மேல், மேளதாள வாத்தியங்களுடன் புறப்பட்ட தேர், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகள் வழியாக, மதியம், 3:00 மணிக்கு தேரடிக்கு வந்தது. பக்தர்களுக்கு, நீர், மோர், அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.வாகனங்கள் நெரிசலின்றி செல்லும் வகையில், கண்ணகப் பட்டில், தற்காலிக பஸ் நிலையம் ஏற்படுத்தி, அங்கிருந்து தாம்பரம், சென்னை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை, கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE