சென்னை:தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை விரிவாக்கவும், முதல் கட்டமாக, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று காரணமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு உதவவும், புத்துயிர் அளிக்கவும், டாக்டர் சி.ரங்கராஜன் குழு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. பரிந்துரைகள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, கடன் வழங்கும் நிறுவனமான, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப் படுத்தவும், அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், கூடுதல் மூலதனமாக, 1,000 கோடி ரூபாயை அரசு வழங்கும். இதற்காக, 2021 - 22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.1,517 கோடி மானியம்
கடந்த, 2011- - 12 முதல், 2020- - 21 வரை, மொத்தம், 1,517.78 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட மானியங்கள் வாயிலாக, 43 ஆயிரத்து, 41 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் அடைந்துள்ளன.கொரோனா தொற்று காலத்தில், தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மானியங்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டு உள்ளன.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயில், இதுவரை, 191 கோடி ரூபாய் மானியம் வழங்க பட்டுள்ளது.நடைமுறையில் உள்ள, தொழிற்பேட்டைகளை உருவாக்கும் திட்டங்களுடன், தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்கப்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்தையும், 'சிட்கோ' என்ற, சிறுதொழில் வளர்ச்சி கழகம் அறிமுகம் செய்து உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE