கோவை:தமிழக அரசின் இலவச டேட்டா திட்டத்தின் கீழ், கோவையில்,75,901 மாணவர்களுக்கு,'சிம்கார்டு' தயாராக உள்ளதாக, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.'ஆன்லைன்' வழி கல்வி அவசியத்தை உணர்ந்து, தமிழக அரசு, ஜன., முதல் ஏப்., வரையிலான காலத்துக்கு பயன்படுத்த,கல்லுாரி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு, 2 ஜி.பி., டேட்டாவுடன் சிம்கார்டு வழங்கி வருகிறது.இலவச சிம்கார்டு, அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவர்கள், சுயநிதி கல்லுாரிகளில் அரசு கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.கோவையில், 47 கலை அறிவியல் கல்லுாரிகள், 96 பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், இத்திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளர்.கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி இது குறித்து கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், 47 கலை அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும், 23,715 மாணவர்களுக்கும், 96 பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும், 52,186 மாணவர்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படவுள்ளது. அரசு கலை கல்லுாரி, அரசு தொழில்நுட்ப கல்லுாரிகளில், சிம்கார்டுகள் தயாராக உள்ளன. விரைவில் வினியோகிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE