சென்னை:மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வில், பின்பற்றிய நடைமுறைகள் குறித்து பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து, 2020 டிசம்பர், 30ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் லோகேஷ்வர் தாக்கல் செய்த மனு:
ஆணைய தலைவர் பதவிக்கு, தகுதியான அனைவரும் விண்ணப்பிக்க, சந்தர்ப்பம் அளித்திருக்க வேண்டும். அதிலிருந்து, அதிக தகுதி உடையவரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.தலைமை நீதிபதியுடன் ஆலோசித்த பிறகே, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்திருக்க வேண்டும்;
ஆனால், தலைமை நீதிபதியுடன் ஆலோசிக்கவில்லை. தேர்வுக்குழு கூட்டத்தில்,எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை.உயர் நீதிமன்ற நீதிபதியாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் உள்ளனர். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகளும் உள்ளனர்; அவர்கள் எல்லாம் பரிசீலிக்கப்படவில்லை. தற்போது நியமிக்கப்பட்டவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக இரண்டு ஆண்டுகள் தான் பணியாற்றியுள்ளார். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் ஆஜரானார். அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, இவ்வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, மனித உரிமை ஆணைய தலைவர் தேர்வில் பின்பற்றிய நடைமுறைகள் பற்றி, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து, அரசிடம்விளக்கம் பெறவோ; பதில் மனு தாக்கல் செய்யவோ, அரசு பிளீடருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, நான்கு வாரங்களுக்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE