கோவை:கோவையில் பா.ஜ., மகளிர் அணியினர் நேற்று இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.
கோவை 'கொடிசியா' வளாகத்தில் நாளை நடக்க உள்ள அரசு விழா மற்றும் பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதையொட்டி, பா.ஜ., மகளிர் அணியின் சார்பில், இருசக்கர வாகனப் பேரணி நேற்று நடந்தது. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
புலியகுளம் பகுதியில் துவங்கிய பேரணி லட்சுமி மில்ஸ் சந்திப்பு, காந்திபுரம், சிவானந்தகாலனி, சாய்பாபா கோவில் வழியாக சென்று டவுன்ஹாலில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நிறைவடைந்தது.வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமரை வரவேற்கும் வகையில் மகளிர் அதிகளவு கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்பேரணி நடக்கிறது. சட்டசபை தேர்தலை ஒட்டி, பா.ஜ., சார்பில் பிரதமர் கலந்து கொள்ளும் முதல் பிரசார கூட்டம் இது.
சேலம் முதல் நீலகிரி வரை, மேற்கு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பர்.பெண்கள் அமர்வதற்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்க இளம்பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE