சென்னை : 'தி.மு.க., ஆட்சியில் கொடுத்த, 'டிவி' எந்த வீட்டிலாவது, தற்போது நல்ல நிலையில் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன்' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக, 2011 முதல், 6,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதனால், 12 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. பொருளாதார அரசியல் தெரியாமல், எதிர்க்கட்சி தலைவர் குழந்தைத்தனமாக பேசுகிறார். தி.மு.க., ஆட்சியில் இருந்து செல்லும் போது, ஒரு லட்சம் கோடி ரூபாய், கடன் வைத்து விட்டு சென்றது. கடன் வாங்கி, இலவச, 'டிவி' வழங்குவது என, ஊதாரித்தனமாக செலவு செய்தனர்.
நாங்கள் வளர்ச்சி பணிக்காக, கடன் வாங்குகிறோம். தி.மு.க., ஊதாரித்தனமாக வாங்கிய கடனுக்கு, நாங்கள் வட்டி கட்டுகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த, மிக்சி, கிரைண்டரை, இல்லத்தரசிகள் இன்றும் பயன்படுத்துகின்றனர். தி.மு.க., ஆட்சியில் கொடுத்த, 'டிவி' எந்த வீட்டிலாவது, தற்போது நல்ல நிலையில் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன்.

பெட்ரோல், டீசல் விலை குறைவு தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். படிப்படியாக மதுவிலக்கு என்பதே, அரசின் கொள்கை. ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சசிகலா இல்லாமலே, அ.தி.மு.க., மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE