பாகல்கோட் : பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து ஏற்பட்ட உத்வேகத்தால், பி.எச்டி., முடித்த தம்பதி பாகல்கோட்டையில் டீக்கடை நடத்தி வருகின்றனர்.
பாகல்கோட் சேர்ந்தவர்கள், பிரசாந்த் நாயக். இவரது மனைவி காவ்யா. இருவரும், தொலைதுார கல்வி மூலம், பி.எச்.டி., பட்டம் பெற்றுள்ளனர்.இத்துடன், அரசு வேலைக்காக, என்.இ.டி., மற்றும் எஸ்.இ.டி., தேர்வு எழுதியுள்ளார். இங்குள்ள தனியார் கல்லுாரியில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், வருமானம் அவர்களுக்கு போதவில்லை.
இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், தம்பதியினர் ஆலோசித்து, டீக்கடை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, காலையில், கல்லுாரிக்கு செல்லும் தம்பதியர், மாலையில் டீக்கடை நடத்துவர். இந்த கடைக்கு, 'ஆம் ஆத்மி டீ டைம்' என பெயரிட்டுள்ளனர். இக்கடையின் மூலம், மாதந்தோறும், 30 முதல், 40 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர்.இதன் மூலம், பிரசாந்த் நாயக், தனது தாயார் பெயரில், 'சாந்தா தேவி கல்வி மையம்' துவக்கினார்.
இது குறித்து தம்பதியர் கூறுகையில், ''அரசு வேலை கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை. பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து, உத்வேகம் அடைந்து, டீக்கடை நடத்த முடிவு செய்தோம்.''கடுமையாக உழைத்ததால், எங்களின் கனவு நனவானது. தற்போது சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறோம்,'' என்றனர்.
அரசு வேலை வரும் என எதிர்பார்த்துள்ளோரிடையே, இத்தம்பதியர் உழைப்பு, அனைவருக்கும் முன் உதாரணமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE