சென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., சிலைகளுக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
ஜெ., பிறந்த நாள் விழா சிறப்பு மலரை, பன்னீர்செல்வம்- பழனிசாமி., வெளியிட, அவைத் தலைவர் மதுசூதனன் பெற்றுக் கொண்டார். பல்வேறு காரணங்களால் மரணமடைந்த, ஆறு தொண்டர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக, தலா, மூன்று லட்சம் ரூபாய் வீதம், 18 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில், தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டு இருந்த, 73 கிலோ எடையுள்ள கேக்கை, பன்னீர்செல்வம்- பழனிசாமி., ஆகியோர் இணைந்து வெட்டி, கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கினர்.அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்பாடு செய்திருந்த, மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தனர். இந்த முகாமில், பொது மருத்துவம், இருதய சிறப்பு பரிசோதனை உள்ளிட்ட, அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டு, உரிய மருந்து மாத்திரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இந்த முகாம், நாளை வரை நடக்க உள்ளது.
இலக்கிய அணி செயலர் வளர்மதி ஏற்பாட்டில், இலக்கிய அணி சார்பில், 'எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு, பாகம் - 2' என்ற, 'சிடி'யை, முதல்வர் வெளியிட்டார். அன்னதானமும் வழங்கப் பட்டது.இந்நிகழச்சியில், அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். கட்சி அலுவலகத்தின் வெளியிலும், கட்சியினர் அன்னதானம் வழங்கினர். இதேபோல, தமிழகம் முழுதும், அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., சார்பில், ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE