புதுடில்லி: நாட்டில், தினந்தோறும் பதிவாகும் புதிய கொரோனா பாதிப்புகள், தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அதிகமாக இருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவலை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 7.95 லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நடவடிக்கை
இதன் வாயிலாக, 16 ஆயிரத்து, 752 பேரிடம் தொற்று உறுதியானது. இதில், 86.17 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவை உட்பட, எட்டு மாநிலங்களில், தினசரி பாதிப்பு, அதிகம் பதிவாகி வருகிறது. இதனால், வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 511 ஆக உயர்ந்துள்ளது; இது, மொத்த பாதிப்பில், 1.48 சதவீதம்.
பாதிப்புகள் அதிகரிக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை நடத்தி, வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்.
'கடந்த ஆண்டில், கொரோனாவை கட்டுப்படுத்த, ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் பலன் கிடைத்தது. 'அதனை இழந்துவிடாத வகையில், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல், விதிமீறல்களை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், 'பரிசோதனைகளை அதிகரிப்பது, தொற்று கண்டறியப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைளை தீவிரப்படுத்த வேண்டும்' என்றும் கூறினார். மத்திய சுகாதாரத் துறை சார்பில், வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைளை மேற்கொள்ள, கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ஜம்மு - -காஷ்மீருக்கு, உயர்மட்ட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
அறிக்கை
கடந்த, 24 மணி நேரத்தில், வைரஸ் பாதிப்பால் மஹாராஷ்டிராவில், 51 பேர், கேரளாவில், 18; பஞ்சாபில், 11 பேர் உட்பட, 113 பேர் உயிரிழந்து உள்ளனர்.இவர்களுடன், இதுவரையிலான பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து, 57 ஆயிரத்து, 51 ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம், 1.42 சதவீதம்.கொரோனா பலியில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், 52 ஆயிரத்து, 92 பேர் உயிரிழந்துள்ளனர்.அடுத்ததாக தமிழகத்தில், 12 ஆயிரத்து, 493 பேரும், கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 326 பேரும் பலியாகி உள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
30 நாட்களுக்குப் பின் மீண்டும் உயர்வு
கொரோனா தொற்றால், கடந்த, 24 மணி நேரத்தில், 16 ஆயிரத்து, 752 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த, 30 நாட்களுக்கு பின், ஒருநாள் தொற்று எண்ணிக்கை, மீண்டும் உயர்ந்துள்ளது. இவர்களுடன் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 10 லட்சத்து, 96 ஆயிரத்து, 731 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே, ஏழு லட்சத்து, 75 ஆயிரத்து, 169 பேர் குணம்அடைந்து உள்ளனர்: மீட்பு விகிதம், 97.10 சதவீதமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE