புதுடில்லி: பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், இதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் 2வது அமர்வு ராஜ்ய சபாவில் இன்று (மார்ச் 8) துவங்கியது. இன்று கருத்தடை திருத்த மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட இருந்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, முதல் நாளிலேயே கடுமையான நடவடிக்கைகளை தாம் எடுக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

இதனால் அவையில் அமளி நிலவியது. காங்கிரஸ் எம்.பி,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை கூடியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினை குறித்து பேசினார். அவர் பேசியதாவது:
பெட்ரால் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் நாடுமுழுவதும் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கடும் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 1 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE