கோவை : ""சிறு குடும்பமே முழுமையான வளர்ச்சி அடையும்,'' என்று மாவட்ட கலெக்டர் கருணாகரன் பேசினார்.உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் கருணாகரன் கொடியசைத்து துவங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, நிர்மலா மகளிர் கல்லூரியில் நிறைவடைந்தது. அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரி மாணவியர், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்று விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.நிர்மலா கல்லூரி கலையரங்கில் நடந்த விழிப் புணர்வு கருத்தரங்கை துவங்கி வைத்து கலெக்டர் கருணாகரன் பேசுகையில், ""பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது மக்களின் வாழ்க்கைத் தரமும் வளர்ச்சி அடையும். மக்கள் தொகை அதிகரித்தால் பொருளாதார வளர்ச்சி குறைந்து விடும். இன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்பது முக்கியம். இதனால் அப்பெண் சார்ந்துள்ள குடும்பமும் வளர்ச்சி பெறும்.""குடும்பம் வளர்ச்சி அடையும்போது பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். உயர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப் புணர்வு தேவை. சிறு குடும்பமே முழுமையான வளர்ச்சி அடையும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்,'' என்றார்.மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குனர் சுகுமாரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி இருப்பிட மருத்துவர் சிவப்பிரகாசம், நிர்மலா கல்லூரி முதல்வர் சவேரியம்மாள் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE