விரைவில் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு தரும் சேவைகளுக்கு, ட்ரோன்கள் பரவலாகிவிடும். ஆனால், இந்த சிறு வாகனங்களால் குறைந்த எடையையே சுமக்க முடியும். இக்குறையைப் போக்க, அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா தொழில் நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதிய யுக்தியை சோதித்து, வெற்றி கண்டுள்ளனர்.
நான்கு சிறிய ட்ரோன்களை இணைக்கும் வசதியுள்ள ஒரு பெட்டி மூலம், அவர்கள் இதை உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, அந்த பெட்டிக்குள் வைக்கப்படும், 5.4 கிலோ எடையுள்ள சரக்கை, நான்கு ட்ரோன்களும், ஒரே நேரத்தில் துாக்கிச் செல்லவும், பறக்கும் திசை, வேகம், தரையிறங்கும் நேரம், எடையைப் பொறுத்து தரவேண்டிய அழுத்தம் போன்றவற்றை, நான்கு ட்ரோன்களையும் ஒருங்கிணைக்கும் தானோட்டி அமைப்பு கணக்கிட்டு செலுத்துகிறது.
இந்த முறையில், சரக்கின் எடையைப் பொறுத்து, கூடுதலாக இன்னும் பல, ட்ரோன்களை சேர்ந்து பறக்கும்படி செய்ய முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சரக்கு வண்டி, வீட்டின் மதில் சுவர் அருகே வந்து நிற்க, ஒரு ட்ரோன், சரக்குப் பெட்டியை எடுத்து, முகவரி தாரரின் வீட்டு, கதவருகே கொண்டு போய் வைத்துவிட்டு வண்டிக்கு திரும்பிவிடும். சரக்கு அதிக பளுவுடன் இருந்தால், வண்டியில் இருக்கும், ஐந்தாறு ட்ரோன்கள் ஒருசேர, பெட்டியை துாக்கிக் கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்பும்.
சரக்கு அஞ்சல் சேவை நிறுவனங்கள், இதன் மூலம் ஒரே அளவிலுள்ள ட்ரோன்களை மட்டுமே வாங்கினால் போதும். கூடுதல் எடைக்கு, கூடுதல் திறனுள்ள, பெரிய ட்ரோன்களை வாங்கும் செலவை, இதன் மூலம் தவிர்க்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE