மதுரை: மக்களை சோம்பேறி ஆக்கும் அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
வாசுதேவநல்லூர் தொகுதியை பொதுத்தொகுதியாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது: ஓட்டுகளை விற்கும் மக்கள், நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும். பிரியாணி, மதுபாட்டிலுக்காக தங்களது ஓட்டுகளை பொது மக்கள் விற்பனை செய்கின்றனர்.
இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன்பெறுவதால், மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது. இதனை காரணம் காட்டி மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மக்கள் இதை உணர வேண்டும்.

சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வழங்குகின்றன. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது?
தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறி ஆக்காமல், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE