ரஜினி, அரசியல் கட்சி துவங்குவார் என்று அவரது ரசிகர்கள், எதிர்பார்க்க, அவர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், தேர்தலில், தங்களது பலத்தை காட்ட, ரசிகர்கள் ஆயத்தமாயிருந்த நிலையில், அ.தி.மு.க., கதவு திறந்தது.இந்நிலையில், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலரும், குன்னுார் தொகுதி வேட்பாளருமான வினோத் முன்னிலையில், அ.தி.மு.க., கூட்டணி கட்சிக்கு ஆதரவளிக்க, ரஜினி ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர். முதற்கட்டமாக, ஊட்டியில் நடந்த அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்ற பல நிர்வாகிகள், ஊட்டி, குன்னுார், கூடலுார் வேட்பாளர்களுக்கு தங்களின் முழு ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மீண்டும், கோத்தகிரியில் நடந்த பிரசாரத்தின் போது, மாவட்ட மற்றும் கோத்தகிரி வட்டார நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, தங்களது பகிரங்க ஆதரவை அ.தி.மு.கவுக்கு தெரிவித்தனர்.ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில், குன்னுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வினோத், ஊட்டி தொகுதி பா.ஜ., வேட்பாளர் போஜராஜன், சிட்டிங் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, முன்னாள் எம்.பி.,கள் அர்ஜூணன் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE