நாம் சொந்தமாக ஒரு வீடு அல்லது நிலம் வாங்கும் போது மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தை மூலதனமாக வைத்து சிலர் வீடு வாங்குவார்கள். வங்கி, அல்லது வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று சிலர் வீடு வாங்குவார்கள். சிலர் முதலீடு செய்யும் நோக்கத்திலும் வீடு வாங்குவார்கள். இப்படி எதுவாக இருந்தாலும் சரி வீடு, நிலம் வாங்கும் போது முக்கியமான சான்றிதழ்களை வாங்கி படிக்க தவறிவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
தடையில்லா சான்றிதழ்
வீடு வாங்குபவரை விட கட்டுமான நிறுவனங்கள் பல முக்கிய சான்றிதழ்கள் வாங்க வேண்டும். ஒரு கட்டுமானத்தை துவங்கும் முன் அந்த நிறுவனம் சுற்றுச்சூழல், மின்சாரம், தீயணைப்பு, நீர் போன்ற பல துறைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, உள்ளூர் திட்டக் குழுக்கள் ஆகியவற்றிடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இந்தச் சான்றிதழ்களை எல்லாம் வீடு வாங்குவோர் பார்வையிட வேண்டும். இவற்றின் நகல்களை கேட்டும் பெற வேண்டும். கட்டுமான நிறுவனம் தடையில்லா சான்றிதழ், துவக்க சான்றிதழ் பெற்று விட்டாலே போதும் அவற்றின் நகல்களை வாங்கிய பின் வீடு வாங்கலாம்.
வில்லங்க சான்றிதழ்
இது மட்டுமல்லாமல் வீட்டு மூல பத்திர நகல்கள், வில்லங்கம் இல்லா சான்றிதழ் வாங்க வேண்டும். குறிப்பிட்ட வீடு, புறம்போக்கு நிலத்தில் கட்டப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். நில அளவை புத்தகம் அல்லது நகர சர்வே வரைபடம், பட்டா, சிட்டா ஆவணங்களின் நகல்களை பெற வேண்டும். குறிப்பிட்ட நிலத்தின் வழியாக மின் தடம், தொலைபேசித் தடம், நீர்த் தடம் அல்லது ஏதேனும் பாதை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குளமோ, ஏரியோ, ரயில்வே இருப்புப் பாதையோ அருகில் இருந்தால், தடையில்லா சான்றிதழ் அவசியம் பெற வேண்டும்.
குப்பைக் கிடங்கு, மயானம், கல்குவாரி ஆகியவற்றிற்கு அருகே இடம் அல்லது வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும். விமான நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட துாரத்திற்குள் வீடு இருந்தால், விமான நிலைய ஆணையத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE