வாஷிங்டன் : பாகிஸ்தானில், 2002ல், கடத்தி கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பியர்லின் குடும்பத்தினரை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் சந்தித்தார்.
உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதாக, அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையின் தெற்காசிய செய்தி பிரிவின் தலைவராக இருந்த டேனியல் பியர்ல், 38, செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, 2002ல் சென்றார். பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., மற்றும் பயங்கரவாதிகள் இடையே உள்ள தொடர்பு குறித்து, அவர் தகவல் சேகரித்தார். இந்நிலையில், கடத்திச் செல்லப்பட்ட அவர், தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அஹமது ஒமர் சயீத் ஷேக் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கில், பாக்., உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பியர்லின் குடும்பத்தாரை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென், நேற்று சந்தித்துப் பேசினார். இந்த வழக்கில் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதாக அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE