சென்னை: தமிழகத்தில், பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நேற்று வரை ரூ.412 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
நிருபர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்று அதிகாலையில் கூட ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.91.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது யாருடைய பணம் என விசாரணை நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7,600 லிட்டர் மதுபாட்டீல்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

விருதுநகர் தொகுதியில் ரூ.65 லட்சமும், சைதாப்பேட்டை தொகுதியி்ல ரூ.1.3 கோடியும், குறிஞ்சிப்பாடியில் ரூ.11.38 லட்சம், கோவை நகரில் ரூ.98 லட்சமும், வேலூர் மாவட்டத்தில் ரூ.1.06 கோடியும், ஆயிரம் விளக்கு தொகுதியில் ரூ.1.23 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக நேற்று வரை மாநிலம் முழுவதும் ரூ.412 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தால், தேர்தலுக்கு பிறகு திருப்பி தரப்படும்.
இன்று இரவு 7 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. ஓட்டுப்பதிவு நாள் அன்று தலைமை செயலகத்தில் இருந்தபடியே ஓட்டுப்பதிவை கண்காணிக்க உள்ளேன். வரும் செவ்வாய் அன்று ஓட்டுப்பதிவு நடக்கும் சாவடிகளுக்கு திடீர் ஆய்வு செல்லும் திட்டமில்லை. நாளை மாலைக்குள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களும் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டு விடும். ஓட்டு சாவடிக்குள் வாக்காளர்கள் மொபைல்போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. ஓட்டுச்சாவடிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE