சென்னை : தலைமை செயலகம் முன், திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், 40க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் நேற்று தலைமை செயலகம் வந்தனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், விவசாயிகள் சட்டை அணியாமல், அரை நிர்வாணமாக, மனு தாக்கல் செய்ய சென்றோம். சட்டை அணியாததால், வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. இது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு, மார்ச், 23ல் மனு அளித்தோம்; நடவடிக்கை இல்லை. எனவே, அரவக்குறிச்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என, வலியுறுத்தினர். அதற்கு, தற்போது ஏதும் செய்ய முடியாது என, தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
இதையடுத்து, அய்யாக்கண்ணு தலைமையில், தலைமை செயலக வாயில் முன், விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட, 40க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE