காங்கேயம் : காங்கேயம் தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர் மாயமான நிலையில், பணத்துடன் அவர் ஓடி விட்டதாக, கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளராக, ரமேஷ் போட்டியிடுகிறார். தேர்தல் அலுவலகம் திறந்து, தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார். பிரசாரம் ஓய்ந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, தேர்தல் அலுவலகத்தில் இருந்து காரில் சென்ற ரமேஷ், அதன்பின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவில்லை. கட்சி தலைமை, தேர்தல் பணிக்காக வழங்கிய பணத்துடன், மாயமாகி விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், பூத் பணிக்கு கூட ஆட்களை நியமிக்க முடியாமல், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அ.ம.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தேர்தல் நடக்கும் நிலையில், பூத் ஏஜன்ட் கூட நியமிக்காமல், வேட்பாளர் மாயமாகி விட்டார். அவரின் மொபைல் போனும், தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக சொல்கிறது. கட்சி தலைமை தந்த பணத்துடன் மாயமாகி விட்டதாக தெரிகிறது. அல்லது, மாற்று கட்சியினரிடம் பணம் பெற்றுக் கொண்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE