சண்டிகர்:பஞ்சாபின் திப்ரூகர் சிறையில் இருந்த, பகுஜன் சமாஜ் கட்சி, எம்.எல்.ஏ., முக்தார் அன்சாரி, உத்தர பிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, 2019ம் ஆண்டு பண மோசடி வழக்கில், உத்தர பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வும், பிரபல தாதாவுமான முக்தார் அன்சாரி கைதானார்.இதையடுத்து, திப்ரூகர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவர் மீது, உத்தர பிரதேசத்தில், 52 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில், 15 வழக்குகள் மீதான விசாரணை துவங்க உள்ளன. இதனால், முக்தார் அன்சாரியை தங்கள் சிறைக்கு மாற்ற வேண்டும் என, உத்தர பிரதேச போலீசார், பஞ்சாப் சிறைத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.இது ஏற்கப்படாததால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதற்கான அனுமதியை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, உத்தர பிரதேச போலீசார், ஆம்புலன்ஸ் மற்றும் வஜ்ரா வாகனம் உட்பட பலத்த பாதுகாப்புடன், நேற்று திப்ரூகர் சிறைக்கு வந்தனர். அவர்களிடம், முக்தார் அன்சாரி ஒப்படைக்கப்பட்டார். அவரை ஆம்புலன்சில் ஏற்றி, போலீசார் உத்தர பிரதேசம் அழைத்துச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE