பொள்ளாச்சி:கோடை வெயில் கடுமையடைந்துள்ள நிலையில், உஷ்ணத்தின் தாக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்ப, பொதுமக்கள் அதிகளவில் இளநீர், நுங்கை உட்கொள்கின்றனர்.பொள்ளாச்சி பகுதியில் இந்தாண்டு கோடை வெயில் மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த சில வாரங்களாக, பகலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு உஷ்ணம் அதிகரித்துள்ளது.அதீத வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர்ச்சத்து வற்றுதல், சிறுநீர் பாதையில் தொற்று, சின்னம்மை, உடலில் வேனற்கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர்.இப்பிரச்னைகளில் இருந்து தப்ப, உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் மற்றும் நுங்கை, மக்கள் அதிகம் உட்கொள்ள துவங்கியுள்ளனர். இதனால், இளநீர் அதிகளவில் சாகுபடியாகும் பொள்ளாச்சியிலேயே, விலை அதிகரித்துள்ளது. ஓர் இளநீர், 25 -35 ரூபாய்க்கும், இரண்டு நுங்குகள், 20 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. விலை அதிகரித்து இருந்தாலும், உஷ்ணத்தில் தவிக்கும் மக்கள், விலை பற்றிய கவலையின்றி, இளநீர் மற்றும் நுங்கை சாப்பிடுகின்றனர்.வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சியில் உற்பத்தியாகும் இளநீருக்கு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கிராக்கி அதிகம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வெள்ளை ஈ தாக்குதல், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் இளநீர் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.இதனால், உள்ளூர் தேவைக்கு குறைந்த அளவே இளநீர் கிடைக்கிறது. கோடை காலம் என்பதால், விலையும் அதிகரித்துள்ளது. அதே போன்று, நுங்கு வரத்தும் குறைந்து, விலை அதிகரித்து விட்டது.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE