பொள்ளாச்சி:பந்தல் காய்கறி சாகுபடியில், புடலை பயிரிட்டு, முறையாக பராமரித்தால் நல்ல வருவாய் ஈட்டலாம் என, தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.பொள்ளாச்சியில் கோடை காலம் முடிந்து, தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியதும், விவசாயிகள் காய்கறி சாகுபடியில் தீவிரம் காட்டுவர். சமீப ஆண்டுகளில், பந்தல் முறை சாகுபடியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.பந்தல் முறையில், புடலை சாகுபடி குறித்து, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் பிரபு கூறியதாவது:சாகுபடிக்கு முன்பு, விளை நிலத்தை மூன்று முறை உழவு செய்து, கடைசி உழவின்போது, 20 டன் மக்கிய தொழு உரத்தை இட வேண்டும். விதைப்பு குழிகளில், தொழு உரத்துடன், மேல் மண் கலந்து நிரப்ப வேண்டும்.ஒரு எக்டருக்கு, 1.5 - 2 கிலோ விதை தேவைப்படும். விதைகளை உயிர் உரங்களில் விதை நேர்த்தி செய்து விதைப்பது முக்கியம். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட எட்டு முதல், 10 நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும். சொட்டுநீர் பாசனம் அமைப்பது நல்லது.உர மேலாண்மைஒரு எக்டருக்கு அடியுரமாக, 20 - 30 கிலோ தழைச்சத்து; 30 - 50 கிலோ மணிச்சத்து; 30 - 40 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். மேலுரமாக, 20 - 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும். 70வது நாளில் குழிக்கு, மக்கிய தொழு உரம் ஒரு கிலோ இட்டால், மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.விளக்கு பொறி மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதல் அதிகமிருந்தால், தோட்டக்கலை துறையின் ஆலோசனை பெற்று, மருந்துகள் பயன்படுத்த வேண்டும். காய்கறி பயிர்களில் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE