சென்னை:சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க, சொந்த ஊர்களுக்குச் சென்றோர், ஊர் திரும்பும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில், நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்காக, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கும்படி, தேர்தல் கமிஷனும், தொழிலாளர் துறையும் உத்தரவிட்டிருந்தன. எனவே, ஓட்டளிக்க சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, 1ம் தேதியில் இருந்து, 5ம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து, ஐந்து நாட்களும் சேர்த்து, 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப் பட்டன. அவற்றின் வாயிலாக, 5.80 லட்சம் பேர் பயணித்தனர்.அதேபோல, நேற்றும், இன்றும், பல்வேறு ஊர்களில் இருந்து, சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும், 2,225 பஸ்களுடன், 2,115 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், சேலம், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெங்களூருக்கு, 1,738 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியரின் தேவைக்கேற்ப, மற்ற ஊர்களுக்கு பஸ்களை இயக்க, போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE