உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றம், 'ஊழல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வழங்குவதை, நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது. மேலும், 'ஊழல் வழக்குகளை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது; இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் தப்ப வழி ஏற்படும்' என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதிகாரம் இருந்தால், ஒரு ஊழல் வழக்கை, 20 ஆண்டுகள் கூட இழுத்தடிக்க முடியும் என்பதை, நாம் பார்த்திருக்கிறோம். நீதிமன்றம் கொடுக்கும், 'வாய்தா' என்ற சலுகை தான், பல குற்றவாளிகளை வாழ வைக்கிறது; அவர்கள் மீண்டும் தவறு செய்ய, ஊக்குவிக்கிறது.

'ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை, எந்தப் பதவியும் வகிக்கக் கூடாது' என, சட்டம் இயற்ற வேண்டும்.வழக்குகளை விரைந்து முடிக்கும் அளவிற்கு, நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். வழக்கிற்கு, காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். நீதி வழங்குவதற்கு பெரும் இடையூறாக இருப்பது, நீதிமன்றம் வழங்கும், தேவையற்ற வாய்தா தான். எதிர்காலத்தில், வாய்தா இல்லாத நீதிமன்றங்கள் உருவாக வேண்டும். குற்றவாளிகளுக்கு, நீதிமன்றத்தைக் கண்டால், அச்சம் ஏற்பட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE