புதுச்சேரி : தட்டாஞ்சாவடி ஓட்டுச்சாவடி அருகே என்.ஆர்.காங்., சின்னம் பொறித்த துண்டு சீட்டுகள் வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்திய கம்யூ., வேட்பாளர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
புதுச்சேரியில் பல இடங்களில் ஓட்டுச்சாவடி அருகில் ஓட்டு சேகரித்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களை போலீசார் விரட்டினர். தட்டாஞ்சாவடி தொகுதி வினோபா நகர், பொய்யாக்குளம் ஓட்டுச்சாவடி அருகே, காரில் வந்த மர்ம நபர்கள், என்.ஆர்.காங்., கட்சி சின்னம் ஜக்கு அச்சிட்ட துண்டு சீட்டுகளை, வீசிச் சென்றனர்.இதை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தடுக்கவில்லை என கூறி, இந்திய கம்யூ., வேட்பாளர் சேதுசெல்வம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், காலை 10:20 மணிக்கு, காமராஜர் சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்தபோது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. தேர்தல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE