சென்னை:பிரதமர் மோடி குறித்து அவதுாறாக பேசியது தொடர்பாக, இன்று மாலை, 5:00 மணிக்குள், பதில் அளிக்கும்படி, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதிக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, தேர்தல் பிரசாரத்தின்போது, 'மூத்த தலைவர்களை ஓரம்கட்டி விட்டு, நான் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்ததாக, பிரதமர் பேசி உள்ளார். 'குஜராத்தில், முதல்வராக இருந்த மோடி தான், மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோரை ஓரம்கட்டி, குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தார். 'மத்திய அமைச்சர்களாக இருந்த, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர், மோடியின் தொல்லை தாங்காமல் இறந்து விட்டனர்' என பேசினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் மகள்கள், கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பிரதமர் குறித்து அவதுாறாக பேசிய உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன், தமிழகத்தலைமை தேர்தல் அதிகாரியிடம், புகார் கொடுத்தார்.இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார்.
இந்நிலையில், இப்புகார் குறித்து, இன்று மாலை, 5:00 மணிக்குள், விளக்கம் அளிக்கும்படி, உதயநிதிக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.