புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த, 28 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 1.16 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர்.
இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முழுதும், கடந்த, 24 மணி நேரத்தில், 12 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனைகள் நடத்தப் பட்டன. இதன் வாயிலாக, 1.16 லட்சம் பேரிடம், வைரஸ் பாதிப்பு உறுதியானது. இவர்களுடன், பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, 1.28 கோடியை கடந்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால், கொரோனா பாதிப்பில் இருந்து, 1.18 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 92.11 சதவீதமாக உள்ளது.
கடந்த, 28 நாட்களாக, வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 8.43 லட்சமாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு உச்சத்தை அடைந்த கொரோனா பரவல் வேகம், பின் படிப்படியாக குறைந்தது. இதன்படி, கடந்த பிப்., 12ம் தேதி சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை, 1.35 லட்சமாக இருந்தது. இவர்களின் விகிதம் ஒட்டுமொத்த பாதிப்பில், 1.25 சதவீதமாகும்.
தற்போது பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், சிகிச்சையில் இருப்போர் விகிதம், 6.59 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் நேற்று ஒரே நாளில், 630 பேர் இறந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 297 இறப்புகள் பதிவாகி உள்ளன.அதேபோல், பஞ்சாபில், 61 பேரும், சத்தீஸ்கரில், 53; கர்நாடகாவில், 39; உத்தர பிரதேசத்தில், 30; மத்திய பிரதேசத்தில், 18; டில்லி மற்றும் குஜராத்தில் தலா, 17 மற்றும் தமிழகத்தில், 15 பேரும் பலியாகி உள்ளனர்.
இவர்களுடன், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 177 ஆக உயர்ந்துள்ளது.மஹாராஷ்டிராவில் மட்டும், 56 ஆயிரத்து, 330 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக தமிழகத்தில், 12 ஆயிரத்து, 804 பேரும், கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 696 பேரும் உயிரிழந்து உள்ளனர்.வைரஸ் பரவல் வேகம் அதிகரிப்பால், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, நேற்று வரை, 25.14 கோடி பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE