மதுரை : மதுரையில் தேர்தல் பணியை முடித்த ஆசிரியர்கள் இன்று (ஏப்., 8) முதல் பிளஸ் 2 தேர்வு பணியை துவங்க உள்ளனர்.
தேர்தலையொட்டி மூன்று பயிற்சி வகுப்புகள், ஏப்.,6 ஓட்டுப் பதிவு பணிகளில் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பல இடங்களில் நேற்று அதிகாலை வரை தேர்தல் பணி செய்தனர். இவர்களுக்கு ஏப்.,7ல் விடுமுறை அறிவிக்க ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தின. மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காததால் ஆசிரியர்கள் அவசரமாக பள்ளிக்கு செல்ல நேர்ந்தது.இந்நிலையில் பிளஸ்2 மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு இன்று துவங்கி ஏப்.,27 வரை நடக்கிறது. அனைத்து மாணவர்களையும் பங்கேற்க வைக்க ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: ஓட்டு பதிவிற்கு மறுநாள் பல மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மதுரையில் மட்டும் அதிகாரிகள் கருணை காட்டவில்லை. ஓட்டு பதிவின்போது ஒவ்வொரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பூத்களில் நுாற்றுக்கணக்கானோர் வந்து சென்றனர். பள்ளி வளாகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளக்கூட அவகாசம் கொடுக்காமல் பள்ளிகள் செயல்பட உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE