கடலுார்; கடலுார் மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் 4 மையங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 9 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்தது.ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களான கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் கடலுார், குறிஞ்சிப்பாடி தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பண்ருட்டி அண்ணா பொறியியல் கல்லுாரியில் பண்ருட்டி, நெய்வேலி தொகுதிக்கான இயந்திரங்களும், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கான இயந்திரங்களும், சிதம்பரம் சி.முட்லுார் அரசு கல்லுாரியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கொண்டு செல்லப்பட்டு, அந்தந்த பகுதி அரசியல் கட்சியினர் முன்னிலையில், 'ஸ்ட்ராங்க் ரூமுக்கு' சீல் வைக்கப்பட்டது.கடலுார், குறிஞ்சிப்பாடி ஓட்டு எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரிக்கு நேற்று அதிகாலை 6:15 மணியளவில் அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் வந்தன. அதையடுத்து, வேட்பாளர் சம்பத் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கப்பட்டது.தேர்தல் பார்வையாளர் ஓம் பிரகாஷ், கடலுார் தொகுதி தேர்தல் அலுவலர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையங்களில் துணை ராணுவம், ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 45 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்ட்ரோல் ரூமில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருத்தாசலம்விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவி பாட்' இயந்திரங்கள் அனைத்தும், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, நேற்று அதிகாலை வரை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி நேற்று முன்தினம் நள்ளிரவு 12:15 மணியளவில், பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்குமார், பொது பார்வையாளர் பிரகாஷ் ஆகியோர் ஓட்டுப்பெட்டிகள், வரிசை எண் ஆகியவற்றை சரிபார்த்தனர்.பின், நேற்று காலை 10:30 மணியளவில், தி.மு.க., வேட்பாளர் கணேசன், பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயன், காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பா.ஜ., தடா பெரியசாமி உட்பட வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஓட்டு எண்ணும் மையத்தில் 'ஸ்ட்ராங் ரூமுக்கு' அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE