கொரட்டூர்; மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், கொரட்டூர் வடக்கு நிழற்சாலையில், புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகி வருகின்றன.சென்னை, அம்பத்துார் மண்டலம், 83வது வார்டு, வடக்கு நிழற்சாலையில், பிரதான மழை வெள்ள உபரி நீர் செல்வதற்கான, கான்கிரீட் கால்வாய் உள்ளது.அதன் தடுப்பு சுவரில் இருந்து, 10 அடி அகலத்திற்கு, பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த பாதையில் ஆடு, கோழி, மீன் இறைச்சி, பழக்கடை என, பல்வேறு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.கடைகள் தவிர, கட்டுமான பொருட்கள், தனியாரின் குடிநீர் டேங்க் மற்றும் வாகனங்களும், சாலையை ஆக்கிரமித்துள்ளன.இதனால், வேறு வழியின்றி சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக முதியோர், பெண்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், அந்த சாலையை கடந்து செல்வது, சவாலாக உள்ளது.தற்போது, தனியாரின் கட்டட கட்டுமான பணிக்காக, 20 அடி நீளம் கொண்ட, மெகா குடிநீர் தொட்டி, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீரை தேக்கி வைத்து, கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும், அங்கு கட்டுமான பணி செய்யும், வட மாநில தொழிலாளர்கள், குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட பணிக்காக பயன்படுத்தி வெளியேற்றும் கழிவு நீர், சாலையில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இது குறித்து, பொதுமக்கள், அம்பத்துார் மண்டல அதிகாரிகளிடம் புகார் செய்தும், வடக்கு நிழற்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE