ராமநாதபுரம்:தமிழகத்தில் வரும், 15ல், மீன்பிடி தடைக்காலம் துவங்கி, ஜூன், 14ல் நிறைவடைகிறது. தடைக் காலத்தில், 1.60 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா, 5,000 ரூபாய் நிவாரண மாக வழங்கப்படும்.
தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 1,076 கி.மீ., நீள கடற்கரை உள்ளது. இதில், புதிதாக துவக்கப்பட்ட மயிலாடுதுறை உட்பட, 14 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இங்கு, மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது.கடல்வளத்தை பாதுகாக்கவும், கடலில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப் படும்.
இந்த ஆண்டு வரும், 15ல் மீன்பிடி தடைக்காலம் துவங்கி, ஜூன், 14ல் முடிவடைகிறது. இந்த தடைக்காலத்தில், விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.பாரம்பரிய கரை வலை, மிதவை மீன் பிடிப்பு, துாண்டில் மீன் பிடிப்பு போன்றவை மட்டும் அனுமதிக்கப்படும்.
தடைக்காலத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்படுவதால், கடலில் மீன் வளம் பெருகும். அதே நேரத்தில், படகுகளை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க, தமிழக அரசு தடைக்கால நிவாரண தொகை வழங்குகிறது.அதன்படி இந்த ஆண்டு, 1.60 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE