உடுமலை:ஆலாம்பாளையம் குளத்தை துார்வாரி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், பூசாரி நாயக்கன்குளம் அமைந்துள்ளது. இக்குளத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக, அரசாணை அடிப்படையில், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்கப்படுகிறது.
சுற்றுப்பகுதியைச்சேர்ந்த பல கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக அமைந்துள்ள இக்குளம் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது.இதனால், நீர்த்தேக்க பகுதியில், பல வகை மரங்கள் முளைத்தும், மண் மேடாகவும் காட்சியளிக்கிறது. மழைக்காலத்திலும், பி.ஏ.பி., திட்டத்திலிருந்தும், குளத்துக்கு நீர் வரத்து கிடைக்கும் போது அதை முழுமையாக தேக்க முடியாத நிலை ஏற்படுகிறது.குளத்திலிருந்து, தண்ணீர் திறக்கும் மதகுகள், உபரி நீர் வெளியேறுவதற்கான தடுப்பு ஆகியவையும், சேதமடைந்து காணப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: ஆலாம்பாளையம் குளத்தில் தண்ணீர் தேக்கும் போது, அதை ஆதாரமாகக்கொண்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலத்தடி நீராதாரம் பெறுகின்றன. எனவே, குளத்தை துார்வாருவது அவசியமாகும்.மேலும், குளத்துக்கு, மழை நீர் ஓடை வழியாகவே, பி.ஏ.பி., கால்வாயில் இருந்து திறக்கப்படும், தண்ணீர் வருகிறது. இந்த ஓடை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில், கழிவு நீரும் நேரடியாக கலக்கிறது. இதனால், தண்ணீர் மாசடையும் வாய்ப்புள்ளது. குளத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறையினர், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்த்தேக்க பரப்பிலுள்ள, மண் மேடுகளை அகற்றினால், மழைக்காலங்களில், கிடைக்கும் தண்ணீரை வீணாக்காமல், தேக்க முடியும். குளத்து கரையில், சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டாலும், அவை மீண்டும் முளைக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE