உடுமலை:புதுப்பாளையம் கிளை கால்வாயில், நீர் சேதாரத்தை தவிர்க்க, கரைகள் சேதமடைந்துள்ள பகுதிகளில், முழுமையாக புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஏ.பி., பாசனத்திட்டத்துக்குட்பட்ட, புதுப்பாளையம் கிளைக்கால்வாயில், இரண்டாம் மண்டல பாசனத்தில், 7,219 ஏக்கரும், நான்காம் மண்டலத்தில், 7,310 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.பிரதான கால்வாயிலிருந்து, பூசாரிபட்டி ஷட்டரிலிருந்து பிரிக்கப்பட்டு, 40 கி.மீ., துாரத்துக்கு, கடந்த 1964ம் ஆண்டு, இந்த வாய்க்கால் கட்டப்பட்டது. இந்த கால்வாயில், இருந்து, 30 பிரிவு வாய்க்கால்கள் வாயிலாக, தண்ணீர் விளைநிலங்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.தொடர் பயன்பாடு உட்பட காரணங்களால், இக்கால்வாய் கரைகள் சேதமடைந்து, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு, முன், நீர் வள நில வள திட்டத்தின் கீழ், 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிக சேதமடைந்திருந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன; கால்வாய் முழுவதும் இப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, கடைமடை பகுதியில், கால்வாய் சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால், பல்வேறு இடங்களில், கரைகள் வலுவிழந்து பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.இன்னும் சில மாதங்களில், துவங்கும், நான்காம் மண்டல பாசனத்தில், இந்த கால்வாயில், 7,310 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. தற்போது, பாசனம் இல்லாத நிலையில், பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும். புதுப்பாளையம் கிளை கால்வாய் கரையில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, மண் பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதை, பொதுப்பணித்துறையினர் மட்டுமல்லாது, விவசாயிகளும், கிராம மக்களும் அதிகளவு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது பாதை பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளது.சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து, பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால், பாதையை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இப்பாதையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE