புதுச்சேரி; வக்கீலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.மூலக்குளம் காரை கோவிந்தன் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன், 54; வக்கீலான இவர் கடந்த 6 ம் தேதி இரவு 10 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு பைக்கில் வந்தார்.மூலக்குளம் நெக்ஸா கார் ஷோரூம் அருகே வந்த போது எதிரே பைக்கில் வந்த 2 பேர் திடீரென திரும்பினர். அவர்களது பைக் மோதியதில், நிலைத்தடுமாறி வக்கீல் வேல்முருகன் கீழே விழுந்தார். எதிரே வந்த 2 பேரும் வக்கீல் வேல்முருகனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் வேல்முருகன் அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது.அந்த வழியாக போலீசாரின் ரோந்து வாகனம் வந்ததும், பைக்கில் தப்பினர். தாக்குதலில் காயமடைந்த வக்கீல் வேல்முருகன் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார்.வேல்முருகனை தாக்கியது மூலக்குளம் ஜே.ஜே., நகர் பிரான்சிஸ், 23; மற்றும் அவரது தம்பி என தெரிந்தது. இருவர் மீதும் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE