புதுச்சேரி; நெட்டப்பாக்கம் அரசு பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திய ஆசிரியை மீது கல் வீசி தாக்கிய மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.நெட்டப்பாக்கம் அரசு மேனிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்ததாக மாணவர்கள் சிலர் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று காலை 8.00 மணியளவில், பிளஸ் 2 வகுப்பு ஆசிரியை ஆன்மரி மார்ஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறை வாசலில் நின்றிருந்த, சஸ்பெண்ட் ஆன மாணவர்களில் ஒருவர், தனது கையில் வைத்திருந்த செங்கல்லை ஆசிரியை மீது வீசினார். இதை பார்த்து சுதாரித்து ஆசிரியை விலகினார். ஆனால் அந்த கல் அவரது வலது பக்க விலாவில் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த ஆசிரியையை, சக ஆசிரியர்கள் மீட்டு நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பள்ளி பொறுப்பு துணை முதல்வரிடம் ஆசிரியர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. காயமடைந்த ஆசிரியை ஆன்மரி மார்ஸ் நேற்று கொடுத்த புகாரின் பேரில், இரு மாணவர்கள் மீது நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மனோகரன், பொது செயலாளர் பாரி விடுத்துள்ள அறிக்கையில், 'இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க பள்ளி கல்வித் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE