உத்திரமேரூர்; உத்திரமேரூரில் தங்க புதையல் கோவில் என அழைக்கப்படும், குழம்பேஸ்வரர் கோவிலில், நான்கு மாதங்களுக்கு பின், இன்று, பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.உத்திரமேரூரில், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும், குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.அதன்படி, புதிய கற்கோவில் அமைப்பதற்காக, கடந்த டிசம்பர் மாதம், பாலாலயம் நடத்தப்பட்டு, புனரமைப்பு பணியை துவக்கியபோது, கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, தங்கப்புதையல் கோவில் என அழைக்கப்படும், இக்கோவில் புனரமைப்பு பணிக்கு, போதுமான நிதி இல்லாததால், திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.பாலாலயத்திற்கு பின், குழம்பேஸ்வரருக்கு, பிரதோஷ வழிபாடு நடத்த கிராமவாசிகள், விழாக்குழுவினர், சிவபக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நான்கு மாதங்களுக்கு பின், இன்று மாலை, 5:00 மணிக்கு, குழம்பேஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE